சேலத்தை அடுத்த நில வாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. கட்டட மேஸ்திரி. இவரின் மனைவி ரோஷினி. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் நிதர்சன் என்ற ஆண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மீண்டும் அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து ராஜா வேலை சம்பந்தமாக வெளியில் சென்று விட்டார்.
அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரோஷினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் குழந்தை ஆதரவற்று தவிக்கும் என கருதி அவர் மனதை கல்லாக்கி கொண்டு குழந்தை நிதர்சனுக்கு பாலில் விஷம் கொடுத்து கொலை செய்தார்.
பின்னர் தானும் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மல்லூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தாய், குழந்தை ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ரோஷினிக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆவதால் வரதட்சணை கொடுமை தற்கொலைக்கு காரணமா என்பது குறித்து சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்பப் பிரச்னையில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.