அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் நிஷிதா கந்துலா (23). கடந்த மாதம் 30ஆம் திகதி முதல் அவர் காணாமல் போயுள்ளதாக சான் பெர்னார்டினோ போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நிஷிதா கந்துலா பற்றிய தகவல்களுடன் முன்வருமாறு சான் பெர்னார்டினோ காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் காணாமல் போவது, மர்ம மரணம் போன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் சிகாகோவில் படித்து வந்த ரூபேஷ் சந்திரகாந்த் சிந்தாகிந்த் என்ற மாணவர் காணாமல் போனார்.
கடந்த ஏப்ரல் மாதம் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு படித்து வந்த ஹைதராபாத்தை சேர்ந்த முகமது அப்துல் அராபத் என்ற மாணவர் காணாமல் போனார்.
பின்னர் அவர் கிளீவ்லேண்டில் இறந்து கிடந்தார். மார்ச் மாதம், 34 வயதான பரதநாட்டிய கலைஞர் அமர்நாத் கோஷ் மிசோரியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்திய மாணவர்கள் அடிக்கடி காணாமல் போவதும், தாக்கப்படுவதும் அங்குள்ள இந்திய சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.