பள்ளி வளாகத்தில் மாணவர் மயங்கி விழுந்து மரணம்….!!!

58

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே உள்ள பொம்மியாபுரத்தை சேர்ந்தவர் முத்து மகன் மகேந்திரன் (12). இவர் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் பள்ளி இடைவேளையின் போது சக மாணவர்களுடன் வெளியே வந்த மகேந்திரன் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர் மகேந்திரனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விசாரித்தபோது, ​​பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் விழுந்து கிடந்த நாவல் பழத்தை மாணவர் மகேந்திரன் எடுத்து சாப்பிட்டு தண்ணீர் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த சக மாணவர்கள் உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மாணவன் மகேந்திரனை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. எனினும் மாணவர் மகேந்திரன் உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பனிமயமாதா கோவில் திருவிழா கடந்த 5ம் தேதி நடந்தது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 5ம் தேதி உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக சனிக்கிழமை (நேற்று) பள்ளிகள் இயங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவிபத்தில் சிக்கிய தம்பதி குழந்தையைப் பெற்றெடுத்து உயிரிழந்த இளம்பெண்…!!!
Next articleகள்ளக்காதலன் உதவியுடன் கணவரை கொன்ற மனைவி.. உண்மையை வரவழைத்த வாய் பேச முடியாத காவலர்…!!!