காபியில் சயனைடு கலந்து இளம்பெண் கொலை காதல் கணவனும், மாமியாரும் செய்த கொடூரம்…..!!!

31

மருமகளுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக கணவர், மாமியார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பென்னட் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ஜவஹருல்லா (50). ஆட்டோ ஓட்டுநரான இவருடைய மனைவி யாஸ்பின் (47). இவர்களுக்கு இம்ரான் (27), முக்தார் (24) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் இம்ரான், உதகை வண்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த அப்துல் சமது – நிலாபர் நிஷா தம்பதியின் மகளான ஆஷிகா பர்வீன்(22) என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இரு வீட்டாரிடம் தெரிவித்தனர்.

முதலில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இரு வீட்டாரும், பின்னர் சம்மதித்து இம்ரானும், ஆஷிகா பர்வீனுக்கும் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிகளுக்கு, 2 வயதில் குழந்தை உள்ளது.

மாமியார் யாஸ்பினுக்கும், மருமகள் ஆஷிகா பர்வீனுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ள நிலையில், கடந்த ஜூன் 23ம் தேதி மர்மமான முறையில் ஆஷிகா பர்வீன் இறந்துள்ளார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து உதகை மேற்கு போலீசார் ஆஷிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில், காபியில் ஆஷிகாவுக்கு சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், வரதட்சனையாக ரூ.20 லட்சம் கேட்டு தராததால் இந்தக் கொடூர செயலில் ஆஷிகாவின் மாமியார் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து யாஸ்பின், இம்ரான், முக்தார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நகைக் கடையில் சயனைடு விஷம் வாங்கி கொடுத்த யாஸ்பின் குடும்ப நண்பரான உதகையை சேர்ந்த காலிப் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

Previous articleமழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பெண் இளம் விஞ்ஞானி பரிதாபப் பலி….!!!
Next articleதிடீரென மணமகளுக்கு முத்தம் கொடுத்து கட்டியணைத்த நபர்….!!!